கிச்சன் கீர்த்தனா : வல்லாரை தொக்கு

Published On:

| By Minnambalam

ஞாபகசக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், நரம்பு சார்ந்த பிரச்சினைகள் இருப்பவர்களுக்கும் வல்லாரை மிக நல்லது.

தேர்வுக்காலத்தில், பள்ளிக் குழந்தைகளுக்கான சிறந்த உணவாக இந்த வல்லாரை தொக்கைச் செய்துகொடுக்கலாம்.  இதை சூடான சாதம், இட்லி, தோசை எல்லாவற்றுக்கும் சைடிஷ் ஆக வைத்துப் பரிமாறலாம்.

என்ன தேவை?

வல்லாரைக்கீரை – ஒரு கப்
புளி – சிறிய எலுமிச்சை அளவு
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
வெந்தயப்பொடி – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நாட்டுச்சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

வல்லாரைக்கீரையின் அடிப்பாகத்தில் இருக்கும் ஒரு இஞ்ச் அளவிலான தண்டை நறுக்கி நீக்கிவிட்டு, மீதியுள்ள பாகத்தை தண்ணீரில் நன்கு கழுவி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பச்சையாக மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். புளியைக் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அரைத்த கீரை விழுதைச் சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். இத்துடன் புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

அடுப்பைக் குறைத்தே வைக்கவும். கீரைக் கலவையில் சீரகத்தூள், மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி, தேவையான உப்பு சேர்த்துக் கிளறி கொதிக்கவிடவும். கலவை புளிக்காய்ச்சல் போல நன்கு திரண்டு வரும் வரை வதக்கி நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: இதே முறையில் கறிவேப்பிலையிலும் தொக்கு செய்யலாம்.

கீரை சாதம்

வல்லாரை துவையல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel