6ஆம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழக அரசு தடை செய்துள்ளது.
மேலும், அவ்விளையாட்டிற்கு நிரந்தர தடை விதிக்கும் வகையில் நிரந்தர சட்டம் இயற்றிய தமிழக அரசு அதனை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது.
இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட 6ஆம் வகுப்பு மூன்றாம் பருவத்திற்கான கணிதப் பாடத்தில் சூதாட்டம் குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது.
அந்தப் பாடப்புத்தகத்தின் இயல் 2வில் முழுக்கள் என்ற பாடத்தில் சூதாட்டம் குறித்த விளக்கமும், அதுகுறித்து விதிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
பல உயிரிழப்புகளுக்கு காரணமான ஆன்லைன் ரம்மி குறித்த பாடம், குழந்தைகளின் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை உடனடியாக நீக்கவேண்டும் என கல்வியாளர்களும், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் பாடப்பகுதியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கல்வியாண்டில் தான் இந்த பாடப்பகுதி இடம் பெற்று இருப்பதாகவும் அடுத்த கல்வியாண்டு முதல் ரம்மி விளையாட்டு குறித்த பாடப்பகுதி முழுவதுமாக நீக்கப்படும் என்றும் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
இந்த நாட்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை!
ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை முடக்க முடியாது: எடப்பாடி