பஞ்சாப் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தமிழக வீரருக்கு ராணுவ மரியாதை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பஞ்சாப் பதிண்டா பகுதியில் இருக்கும் ராணுவ முகாமில் ஏப்ரல் 12 ஆம் தேதி அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தை சேர்ந்த 2 ராணுவ அதிகாரிகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
அவர்களது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரவர் சொந்த ஊர்களுக்கு இன்று (ஏப்ரல் 14) அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கமலேஷ், தேனி மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ் குமார் ஆகியோரது உடல்கள் இன்று காலை விமானம் மூலம் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் அவர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆனால் ராணுவ வீரர்களுக்கு முறையான ராணுவ மரியாதை அளிக்காமல், ராணுவ வாகனத்தில் உடல்களைக் கொண்டு வராமல் ஆம்புலன்ஸ் வாகனத்திலும் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
ராணுவ முகாமில் உயிரிழந்த வீரர்களுக்கு முறையான ராணுவ மரியாதை அளிக்கப்படவில்லை என்று சேலம் வனவாசியில் கமலேஷ் குமாரின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணுவ வீரர் கமலேஷின் உடலை ராணுவ மரியாதையுடன் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுவதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
கமலேஷின் உறவினர்களுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மோனிஷா