பிறந்த குழந்தைகள் முதல் வளரும் பிள்ளைகள், பெண்கள் என அனைவருக்கும் பால் உணவுகளும், கீரை வகைகளும் அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். அதிலுள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கு உதவும்.
ஆனாலும், வெறும் பாலாகக் குடிப்பதற்கும், கீரை உணவுகளைச் சேர்த்து கொள்வதிலும் சுணக்கம் காட்டுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பாலக் சீஸ் பால்ஸ் செய்து கொடுக்கலாம். இந்த வார வீக் எண்டை ரிச்சாகக் கொண்டாடலாம்.
என்ன தேவை?
பாலக்கீரை – அரை கப்
சீஸ் – 50 கிராம்
பனீர் – 30 கிராம்
கார்ன்ஃப்ளார் – 20 கிராம்
மைதா மாவு – 10 கிராம்
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்
சீரகத்தூள் – 2 சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பாலக்கீரையை எடுத்து சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் சீஸ், பனீர், கார்ன்ஃப்ளார், மைதா மாவு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், நறுக்கிய கீரை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
பிறகு, பிசைந்தவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கார்ன்ஃப்ளாரில் ஒரு புரட்டு புரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு:
சீஸ் கியூப்களில் உப்பு சேர்ந்திருக்கும் என்பதால் நாம் செய்யப்போகிற கலவையில் உப்பு சேர்க்கத் தேவையில்லை. உருண்டை பிசையும்போது தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக பிசையவும். சீஸையும், பனீரையும் துருவிக்கொண்டால் பிசைய எளிதாக இருக்கும். பிசைந்தவுடனே எண்ணெயில் பொரித்துவிடவும். தாமதமானால் சீஸ் உருகிவிடும். முதலில் தீயை அதிகமாக்கியும், பிறகு குறைத்தும் சமைத்து, பால்ஸ் சிவந்ததும் எடுத்ததும் பரிமாறவும்.