மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வாய்ப்பு : மு.க.ஸ்டாலின்

Published On:

| By Monisha

நாளை (டிசம்பர் 3) சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “ மாற்றுத்திறனாளிகளை சமுதாயத்தில்‌ ஒருங்கிணைத்து, சம உரிமையுடன்‌, வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்து, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்க அனைவரும்‌ உறுதி மேற்கொள்வதுடன்‌, இதற்கான நடவடிக்கைகளில்‌ ஈடுபடுவதற்காக போதுமான விழிப்புணர்வை சமுதாயத்தில்‌ ஏற்படுத்தும்‌ விதமாக இந்த நாள்‌ அமைந்துள்ளது.

இந்நாளில்‌, மாற்றுத்திறனாளிகள்‌ தங்கள்‌ திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாக விளையாட்டுப்‌ போட்டிகள்‌, கலை நிகழ்ச்சிகள்‌ நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களைப்‌ பாராட்டி ஊக்கப்படுத்தும்‌ விழாக்கள்‌ நடத்தப்படும்‌.

மாற்றுத்திறனாளிகள்‌ சேவையினை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ மாநில விருதுகள்‌ வழங்கப்பட்டும்‌ வருகிறது.

மாற்றுத்திறனாளிகளின்‌ வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்‌ வகையில்‌ அவர்களின்‌ திறனுக்கேற்ற தொழிற்பயிற்சிகள்‌ வழங்கி வேலைவாய்ப்பினை உருவாக்கவும்‌, அவர்கள்‌ உற்பத்தி செய்த கைவினைப்‌ பொருட்களைச் சந்தைப்படுத்தியும்‌, அவர்கள்‌ தன்னிச்சையாகப் பிறரைச்‌ சாராமல்‌ வாழ்வதற்குப் பயன்பெறும்‌ நவீன உதவி உபகரணங்கள்‌ பற்றிய விவரங்களைக்‌ காட்சிப்படுத்தியும்‌, இந்த நாள்‌ மாநிலம்‌ முழுவதும்‌ அடையாளப்படுத்தப்படுகிறது.

இந்நாளில்‌, நாம்‌ அனைவரும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள்‌ வழங்கியும்‌, அவர்களுக்குத் தடையற்ற சூழலை அமைத்தும்‌ அவர்களை நம்‌ வாழ்வில்‌ ஒருங்கிணைப்போம்‌ என உறுதி கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

மோனிஷா

ஜம்மு காஷ்மீர்: பண்டிட்களுக்கு நியமன உறுப்பினர் அஸ்தஸ்து!

விஜய் ஹசாரே கோப்பை: அசத்திய ருதுராஜ் கெய்க்வாட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel