ரயில் விபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

Published On:

| By Monisha

madurai train accident CM stalin

மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் இருந்து தமிழ்நாடு வந்த ரயிலில் ஆன்மிக சுற்றுலா வந்தவர்கள் ரயில் பெட்டியை பூட்டிக் கொண்டு கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமையல் செய்ததில் தீ விபத்து ஏற்பட்டது.

இன்று (ஆகஸ்ட் 26) அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 3 ஆண்கள், 3 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கேஸ் சிலிண்டர் பயன்படுத்தியது தான் விபத்திற்கான காரணம் என்று தெற்கு ரயில்வே விளக்கம் கொடுத்துள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் உதவி எண்கள், நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.

இது குறித்து இன்று வெளியாகியுள்ள அறிக்கையில், “உத்திரப் பிரதேச மாநிலம் சித்தூரிலிருந்து இராமேஸ்வரத்திற்கு வந்த ஆன்மீக சிறப்பு சுற்றுலா ரயிலில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு மதுரை இரயில் நிலையத்தில் இன்று (26-8-2023) அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டது.

அதில் பயணித்த பயணிகள் சமையல் செய்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

மதுரை மாவட்ட ஆட்சியரை உடனடியாக விபத்து நடந்த இடத்திற்குச் சென்று உரிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும்,

காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்குக் கொண்டுசெல்ல தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தியை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தேவையான உதவிகளை செய்திடுமாறும் கேட்டுக்கொண்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share