கோயம்பேடு மார்கெட்டில் வரத்து அதிகரிப்பால் தினசரி ஐந்து டன் காய்கறிகள் வீணாகி குப்பையில் கொட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் நேற்று (ஜூலை 25) 450 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் சில்லறை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது.
இதன் காரணமாக மார்க்கெட் வளாகம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. விற்பனை ஆகாமல் தேக்கமடைந்து வீணாகும் நான்கு முதல் ஐந்து டன் அளவிலான காய்கறிகள் குப்பையில் கொட்டப்பட்டு வருவதால் மொத்த வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். நேற்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ10-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ12-க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ10-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் அதை வாங்கி செல்ல சந்தைக்கு நேற்று சில்லறை வியாபாரிகள் அதிகளவில் வரவில்லை.
இதுகுறித்து பேசியுள்ள மொத்த வியாபாரி ஒருவர், “காய்கறி வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் தக்காளி, அவரை, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் மார்க்கெட்டுக்கு வரும் சில்லறை வியாபாரிகளின் வரத்து குறைந்து விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தேக்கமடைந்து வீணாகி வரும் காய்கறிகளை குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
– ராஜ்