அரசின் நிதி இழப்புக்கு அதிகாரிகளே பொறுப்பு: உயர்நீதிமன்றம்

Published On:

| By Prakash

”அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்புக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு” என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவாரூரைச் சேர்ந்த விஜயகுமாரி என்பவர் கடந்த 2013ஆம் ஆண்டு, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார்.
அதன்பிறகு மருத்துவர்கள் அலட்சியம் காரணமாகவே தனக்கு பார்வை பறிபோனதால், இழப்பீடு வழங்கக்கோரி திருவாரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த திருவாரூர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட விஜயகுமாரிக்கு ரூ. 5 லட்சத்தை இழப்பீடாக மூன்று மாதங்களில் வழங்க வேண்டும் என கடந்த 2015ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இதனிடையே, நீதிமன்ற உத்தரவுப்படி தமக்கு இழப்பீடு வழங்கவில்லை என்றும், அந்த உத்தரவை அமல்படுத்தக் கோரியும் விஜயகுமாரி திருவாரூர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த திருவாரூர் நீதிமன்றம், இழப்பீடு வழங்காததால் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ டீன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, இன்று (டிசம்பர் 24) நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ”திருவாரூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஆறு ஆண்டுகளாக அமல்படுத்தாமல் இருந்த நிலையில் தற்போது மனுத்தாக்கல் செய்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்தார்.

மேலும், “பணியில் கவனக்குறைவாகவும், கடமையை செய்யத் தவறியதாலும் அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்புக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு” எனத் தெரிவித்த நீதிபதி, அத்தொகையை அரசு அதிகாரிகளிடமிருந்தே வசூலிக்க வேண்டுமென உத்தரவில் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீட்டை ஜனவரி 10ஆம் தேதிக்குள் வழங்க உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக சொத்துகளை ஜப்தி செய்ய திருவாரூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

ஜனவரி 10ஆம் தேதிக்குள் இழப்பீடு வழங்கவில்லை என்றால் சொத்துகளை ஜப்தி செய்யும் நடவடிக்கைகளை தொடர அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜெ.பிரகாஷ்

ஆம்னி பேருந்து கட்டணம்: அரசே நிர்ணயிக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

மீராமிதுன் கோரிக்கை நிராகரிப்பு: உயர்நீதிமன்றம் அதிரடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share