திமுக கவுன்சிலர் சர்பராஸ் நவாஸ் ராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தியது கோகைன் போதைப் பொருள் அல்ல விவசாய உரம் என்று ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழுமம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று(நவம்பர் 30) ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கடந்த 28.11.2022இரவு 8மணியளவில் மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும காவலர்கள் வேதாளை கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக வந்த TN 57 AA 0077என்ற பதிவுஎண் கொண்ட பஜீரோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது,
கீழக்கரை சங்குளிகாரத்தெருவை சேர்ந்த சர்பராஸ் நவாஸ் மற்றும் ஜெய்னுதீன் ஆகியோர் 25லிட்டர் கொள்ளளவு கொண்ட 30தண்ணீர் கேன்களில் சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிற பவுடர் 394கிலோ வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்படி நபர்கள் சந்தேகத்திற்கிடமான பொருளை இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் இருந்ததால், அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும மண்டபம் கடற்காவல் நிலைய உதவி ஆய்வாளரால் விசாரிக்கப்பட்டார்கள்.
மேலும் அவர்கள் கொண்டு வந்த பவுடர் போதை பொருளோ அல்லது வெடிமருந்தோ இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. மேற்படி நபர்கள் விவசாய உரத்தினை மிகஅதிக பணமதிப்பிற்காக இலங்கைக்கு அனுப்பவிருந்தது தெரியவந்தது.
இருப்பினும் இந்தச்செயல் சுங்கத்துறை சட்டமீறலின்கீழ் வருவதால் மேற்படி இரு நபர்கள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களுடன் சட்டப்படி உரிய மேல் நடவடிக்கைக்காக மண்டபம் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி, 19-வது வார்டு திமுக கவுன்சிலர் சர்பராஸ் என்பவரும், கீழக்கரை நகராட்சி திமுக முன்னாள் கவுன்சிலர் ஜெய்னுதீன் என்பவரும் ரூ.390 கோடி ரூபாய் மதிப்பிலான கோகைன் போதைப் பொருளை இலங்கைக்கு கடத்தியுள்ளனர்.
திமுக ஆட்சியில் போதைப்பொருள் கடத்தல் கூடாரமாக தமிழகம் மாறியுள்ளது என்று குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
FIFA WorldCup : வாழ்வா? சாவா? ஆட்டத்தில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா