பெண்கள் பாதுகாப்பில் ’சென்னை’ முதலிடம்!

Published On:

| By christopher

இந்தியாவில் உள்ள பெரிய நகரங்களில் பணிபுரியும் பெண்களுக்கு சென்னை தான் மிகவும் பாதுகாப்பான நகரம் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய நகரங்கள் குறித்த ஆய்வில் அவதார் குழுமம் (Avtar Group) ஈடுபட்டது.

இந்தியாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை மற்றும் அதற்கு குறைவான மக்கள்தொகை கொண்ட 111 பெரிய நகரங்களில் 783 பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது.

அங்கு பெண்களுக்கான பணி சூழல், இரவு நேரங்களில் வேலை பார்ப்பதற்கான பாதுகாப்பு சூழல், அனைத்து விதமான கல்வி கொண்ட பெண்களுக்குமான பணி வாய்ப்புகள், போக்குவரத்து வசதிகள், சமத்துவம் ஆகிய 5 அளவு கோல்களை அடிப்படையாக வைத்து இறுதி ஆய்வறிக்கை பட்டியல் தயார் செய்யப்பட்டது.

முதலிடம் பிடித்த சென்னை

இந்நிலையில் ஆய்வு முடிவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு நேற்று (ஜனவரி 6) அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் 78.41 மதிப்பெண்களுடன் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக புள்ளிப்பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

“இந்தியாவில் , மில்லியன் பிளஸ் பிரிவு நகரங்களில், இந்தியாவிலேயே பெண்களுக்கான முதல் நகரமாக சென்னை முதலிடத்தில் உள்ளது.

டாப் 10 இடங்களில் 3 இடங்களை தமிழ்நாட்டு நகரங்கள் பிடித்து உள்ளன. அதன்படி கோவை, மதுரை ஆகிய நகரங்கள் முறையே 9 மற்றும் 10வது இடங்களை பிடித்து உள்ளன.

chennai placed first place for women security in india

மேலும் இறுதிப்பட்டியலில் முதல் 10 இடங்களில் முறையே சென்னை, புனே, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், விசாகப்பட்டினம், கொல்கத்தா, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் முன்னேறிய முதல் கட்ட நகரங்கள் ஆகும்.

இந்த பட்டியலில் தேசிய தலைநகர் டெல்லி 14வது இடத்தில் உள்ளது. முதல் 25 நகரங்களின் பட்டியலில் 10 மாநிலத் தலைநகரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

டாப் 5 இடங்களில் தமிழ்நாட்டு நகரங்கள்!

இதனைத் தொடர்ந்து ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட இரண்டாம் கட்ட நகரங்களின் பட்டியலில் முதல் 5 இடங்களை தமிழ்நாட்டு நகரங்கள் தான் கைப்பற்றியுள்ளன.

இப்பிரிவில் 71.61 மதிபெண்களுடன் பெண்களுக்கான சிறந்த நகரமாக திருச்சிராப்பள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

அவற்றின் டாப் 10 இடங்கள் முறையே திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர், புதுச்சேரி, சிம்லா, மங்களூர், திருவனந்தபுரம் மற்றும் பெலகாவி ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

ஒட்டுமொத்தமாக மாநிலங்களின் சராசரி அடிப்படையில் 55.67 புள்ளிகளுடன் கேரளா முதல் இடத்தில் உள்ளது. 54.4 புள்ளிகளுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும், 45.5. புள்ளிகளுடன் மகாராஷ்டிரா மூன்றாம் இடத்திலும் உள்ளன.

அதிகபட்ச சராசரியைக் கொண்ட முதல் ஐந்து மாநிலங்களில் மூன்று தென்னிந்தியாவைச் சேர்ந்தவை மற்றும் தலா ஒன்று மேற்கு மற்றும் வடக்கில் இருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தெற்கு முன்னே; வடக்கு பின்னே

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள நகரங்களை விடவும், தெற்கு மற்றும் மேற்கில் உள்ள நகரங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

உதாரணமாக புள்ளிப்பட்டியலில் தெற்கே உள்ள சென்னைக்கும், வடக்கே உள்ள டெல்லிக்கும் இடையே 30 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது.

ஆய்வின் முடிவில், நகரத்தை உருவாக்குவதற்கான பல்வேறு குறிகாட்டிகள் பற்றிய அவர்களின் ஆராய்ச்சியின் அடிப்படையில், பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய சூழலை உறுதி செய்யும் சமூக காரணிகளில் அதிக கவனம் செலுத்துமாறு டெல்லி உள்ளிட்ட வட மாநில அரசுகளை அவதார் குழுமம் கேட்டுக்கொண்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

கூச்சல்.. குழப்பம்.. : டெல்லி மேயர் தேர்தலில் களேபரம்!

உலகதர தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share