ஐபிஎல் 16வது சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி, விஜய் சங்கரின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 204 ரன்களை குவித்து, 205 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.
ஐபில் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் ஆடிவருகின்றன.
அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் ரிதிமான் சஹா 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் சாய் சுதர்சனும் ஷுப்மன் கில்லும் இணைந்து பொறுப்புடன் ஆடி 2வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தனர். கில் 39 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த சாய் சுதர்சன் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 8 பந்தில் 16 ரன்கள் அடித்து அபினவ் மனோகர் ஆட்டமிழந்தார்.
டெத் ஓவர்களில் விஜய் சங்கர் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். லாக்கி ஃபெர்குசன் வீசிய 19வது ஒவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசிய விஜய் சங்கர், ஷர்துல் தாகூர் வீசிய கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசினார்.
21 பந்தில் அரைசதம் அடித்து, ஐபிஎல்லில் அதிவேக அரைசதம் அடித்த குஜராத் டைட்டன்ஸ் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 24 பந்தில் விஜய் சங்கர் 63 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 204 ரன்களை குஜராத் டைட்டன்ஸ் அணி குவித்தது. இந்நிலையில், 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்