ஐபிஎல் தொடரில் முக்கிய கேப்டன்களாக கருதப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விடுவிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
வரும் டிசம்பர் மாதம் ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் இன்று (அக்டோபர் 31) தங்களது அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டன.
அதில் பல்வேறு ஆச்சரியங்கள் இருந்த போதிலும், 5 முக்கிய கேப்டன்களின் பொறுப்பு பறிக்கப்பட்டதுடன், அணியில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதன்படி கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயரை அந்த அணி நிர்வாகம் விடுவித்துள்ளது.
அதேபோன்று கடந்த நான்கு ஆண்டுகளாக டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்டை நீண்ட ஆலோசனைக்கு பிறகு விடுவித்துள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரில் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுடன் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளார்.
இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து ஷிகர் தவானும், பெங்களூரு அணியில் இருந்து ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளையில், சென்னை அணியில் ருத்துராஜ் கெய்க்வாட், மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா, குஜராத் அணியில் சுப்மன் கில், ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஹைதராபாத் அணியில் பாட் கம்மின்ஸ் ஆகியோர் மீண்டும் கேப்டன்களாக பெரும் தொகைக்கு தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிகபட்சமாக ருத்துராஜ், சஞ்சு சாம்சன் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ரூ.18 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் விடுவிக்கப்பட்ட கேப்டன்களான கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை எடுக்க மற்ற அணிகள் இடையே ஐபிஎல் மெகா ஏலத்தில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா