மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் மாதம் சர்வதேச அளவிலான அலைச்சறுக்கு போட்டி நடைபெறும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சர்ஃப் ஓபன்- தமிழ்நாடு போட்டிக்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஏப்ரல் 18) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் போது, சர்வதேச அலைச்சறுக்கு போட்டி 2023 – தமிழ்நாடு மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.2.67 கோடி ரூபாய்க்கான காசோலையும் இன்று வழங்கப்பட்டது. மேலும் சென்னையில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மற்றும் இந்திய சர்ஃபிங் சங்கத் தலைவர் அருண் வாசு, விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர், செயலாளர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெறுகிறது.
இதுபோல சர்வதேச போட்டிகளைத் தமிழ்நாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளோம். குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நான் உங்களை சந்திப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தேன்.
ஆனால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நான் உங்களை நேரில் சந்தித்து வருகிறேன். விளையாட்டுத்துறைக்கு இந்த அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பது அதிலேயே தெரிந்துவிடும்” என்று பேசினார்.
மோனிஷா