‘
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு (2022) மார்ச் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளது. தமிழகம் முழுவதுமிருந்து இங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதனால், சென்னையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
குறிப்பாக பண்டிகை நாள்களுக்கு முன்பு, கடும் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் இருந்தது. இதைத் தவிர்க்க வெவ்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் சென்னையைச் சுற்றியிருக்கும் பல்வேறு பேருந்து நிலையங்களிலிருந்து இயக்க தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டு அதன்படி இயக்கப்படுகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காண, ரூ.393 கோடியில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதன், இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மேற்கு மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பஸ்களுக்காக திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் 336 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
**-ராஜ்**
.�,