இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் பாதுகாப்புப் பணியாளர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திருக்கோயில்களின் பாதுகாப்புக்கென 10,000 பாதுகாப்புப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.
கடந்த சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது திருக்கோயில்களின் பாதுகாப்புக்கென 10,000 பாதுகாப்புப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து முதுநிலை திருக்கோயில்களான மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் உட்பட 47 கோயில்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திருக்கோயில் வாரியாக எத்தனை பாதுகாப்புப் பணியாளர்கள் பாதுகாப்புக்கு தேவை என கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முதுநிலை அல்லாத திருக்கோயில்களான மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில், திருச்சி, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில், பண்பொழில் திருமலைக்குமார சுவாமி கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், கடலூர் மாவட்டம், மணவாளநல்லூர், கொளஞ்சியப்பர் கோயில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோயில் உட்பட 489 கோயில்களுக்கு பாதுகாப்புப் பணியாளர்களும் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் பாதுகாப்புப் பணியாளர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான கணக்கெடுப்புப் பணிகள் திருக்கோயில் அலுவலர்கள் மூலம் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்தவுடன் முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
**-ராஜ்**
.�,