வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி விசிக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், குடிநீரில் மலம் கலந்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி ஜனவரி 11-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் விசிக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
செல்வம்
போகி: சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்!