ஆளுநருடன் மோதல் போக்கு தேவையில்லை என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக புதிய உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் சென்னையில் துறை அதிகாரிகளுடன் இன்று (அக்டோபர் 10) ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோவி. செழியன், “தமிழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர், பதிவாளர், கண்காணிப்பாளர் போன்ற காலியிடங்கள் குறித்த விவரங்களை பெற்றிருக்கிறோம். இதுகுறித்து முதல்வரிடம் கலந்துபேசி பணியிடங்கள் நிரப்பப்படும்” என்றார்.
மாணவர்களுக்கு இடையே நடக்கும் மோதலை முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் கோவி.செழியன், “ 4,000 உதவிப் பேராசிரியர் பணிக்கான செயல்பாடுகள் நிறுத்தப்படாது அந்த தேர்வு நடத்தப்படும். 4,000 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.
அவரிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை மீது நிறைய விமர்சனங்களை வைத்து வருகிறாரே. கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநருக்கும், உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கோவி.செழியன், “ முரண்பாடு, மோதல் ஆகியவை நமக்கு தேவையில்லை என்று முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார். முறையான விதிமுறைப்படி மாணவர்களின் நலன் காக்க எது எது செய்ய வேண்டுமோ அதை செயல்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
முட்டல் மோதலை தமிழக அரசு என்றைக்கும் உருவாக்கிக்கொள்வது இல்லை. என்றும் நட்புணர்வோடு தமிழகத்தின் வளர்ச்சிக்கு இந்த துறையும் முதல்வரும் உறுதுணையாக இருப்போம்.
என்றைக்கும் ஆளுநரோடு தமிழக அரசு முரண்பாட்டை விரும்பியதில்லை” என்று பதிலளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
டாடா மறைவு: அரைக்கம்பத்தில் கொடிகள்… கொமதேக முடிவு!