ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு உறுதியளித்த ராம்தாஸ் அத்வாலே

Published On:

| By christopher

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இன்று (ஜூலை 17) சென்னை அயனாவரத்தில் உள்ள மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு சென்றார்.

அங்கு ஆம்ஸ்ட்ராங் படத்திற்கு மரியாதை செலுத்திய பின், அவரது மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தகவல் கொடுத்தது யார்?

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ராம்தாஸ் அத்வாலே பேசுகையில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பின்னால் யாரோ கொலைக்கு திட்டமிட்டுள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும். இவர்களை போலீசார் கைது செய்தது சரிதான், ஆனால் அம்ஸ்ட்ராங்கிடம் ஆயுதம் ஏதும் இல்லை என தகவல் கொடுத்தது யார்?

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை நான் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் ’ஒவ்வொரு முறையும் அவருக்கு மெய்க்காப்பாளர் இருந்த போதும், கொலை செய்யப்பட்ட அன்று மெய்க்காப்பாளர் இல்லாமல் தனியே இருந்தார். கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் தனது புதிய வீட்டிற்குச் சென்ற அவர், அப்போது துப்பாக்கி இல்லாமல் இருந்தார்.

மேலும், அவர் ஆயுதம் ஏந்தவில்லை என்று அவரது மெய்க்காப்பாளர் குழுவைச் சேர்ந்த யாரோ தகவல் கொடுத்திருக்க வேண்டும்’ என அவரது மனைவி என்னிடம் மிக முக்கியமான விஷயத்தை கூறியுள்ளார்.

சிபிஐ விசாரிக்க வேண்டும்!

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு நான் சொல்லி கொள்வது இதுதான், “நான் உங்களுடன் இருக்கிறேன், எனது கட்சியும் உங்களுடன் உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி, வேண்டுகோள் விடுக்கிறேன். நான் அமித் ஷாவை சந்திப்பேன், இது மிகவும் தீவிரமான விஷயம். எனவே இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி முறையிடுவேன். இதுவே எனது கோரிக்கை” என்று தெரிவித்தார்.

தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை!

மேலும் அவர், “தமிழகத்தில் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பல தலித் தலைவர்களும் இங்கு இருக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை. தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என முதல்வரிடம் கேட்டுக் கொள்கிறேன். இந்த வழக்கில் முதல்வர் முடிவெடுக்க வேண்டும்.

சென்னை மாநகர காவல் ஆணையரை இடமாற்றம் செய்து தமிழக முதல்வர் முடிவெடுத்துள்ளார். இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று இந்த புதிய கமிஷனரிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என அத்வாலே கூறி உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஸ்டாலின் தேர்வு செய்த புதிய உள்துறை செயலாளர்: யார் இந்த தீரஜ் குமார்?

குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்த ரம்பா : புகைப்பட தொகுப்பு இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share