மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் இன்று (செப்டம்பர் 21) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் பொதுக்குழு, மாநில நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பொதுக்குழு கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக மீண்டும் கமல்ஹாசனை தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
“தீர்மானம் 1
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைப் பொறுப்பை கமல்ஹாசன் மீண்டும் ஏற்று, இந்த இயக்கத்தை வழிநடத்த வேண்டும் என்று ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 2
மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய பொதுக்குழு, செயற்குழு மற்றும் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்களாகத் தேர்வானவர்கள், கமல்ஹாசன் காட்டிய பாதையில் அர்ப்பணிப்புடன் உழைத்து மக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு எடுத்துச் செல்வார்கள். அவர்களது பணி சிறக்க இந்த பொதுக்குழு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 3:
மக்கள் நீதி மய்யம் கட்சியை மேலும் வலுப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் வருகிற ஜூன் 25-ஆம் தேதிக்குள் குறைந்தது 5,000 புதிய உறுப்பினர்களைச் சேர்க்க உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்த வேண்டும்.
இந்தப் பணிகளில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் முழுமூச்சுடன் ஈடுபட வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 4:
வரவிருக்கும் தேர்தல்களைத் திறம்பட எதிர்கொள்ள பூத் கமிட்டி அத்தியாவசியமான ஒன்று. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும், தலா ஒரு பூத்துக்கு குறைந்த பட்சம் 5 பேர் நியமிக்கப்பட வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 5:
பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிவருகின்றன. இந்தக் குற்றங்களின் ஆணி வேரைக் கண்டறிந்து களையவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிஞர்கள், சமூக சேவகர்கள், வல்லுனர்களை உள்ளடக்கிய ஒரு குழுவை மக்கள் நீதி மய்யம் உருவாக்கி விரிவான ஆய்வுகள் செய்து அதன் அறிக்கையை, பரிந்துரைகளை தமிழ்நாடு மற்றும் மத்திய அரசுக்கு சமர்ப்பிப்பதோடு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை எடுக்க அழுத்தம் கொடுக்கும் என்றும் இந்தப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 6:
போதை வஸ்துக்களின் புழக்கமற்ற தமிழ்நாட்டை உருவாக்கும் அரசின் முயற்சிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி என்றும் உறுதுணையாக நிற்கும் என்று இந்தப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 7:
இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதித் திட்டங்களை முறையாக அமல்படுத்த சாதி வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுக்கப்பட வேண்டியது அவசியம்.
காரணங்களைக் காட்டி கணக்கெடுப்பை தாமதிக்கப்படுவது ஏற்புடையதல்ல. முழுமையான தகவல்களை உள்ளடக்கிய பல்வேறு சாதி வாரியான கணக்கெடுப்பு இந்தியா முழுவதிலும் உடனடியாக துவங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை பொதுக்குழுவில் வலியுறுத்தி நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 8:
தேச வளர்ச்சிக்கு மாநிலங்கள் செலுத்தும் வரிகள் முக்கியப் பங்களிப்பாற்றுகின்றன. தமிழ்நாடு இந்தியாவில் அதிகமான வரிப்பங்களிப்பைச் செய்யும் முதன்மையான மாநிலங்களுள் ஒன்று. ஆனால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உரிய நிதிப்பகிர்வை தீர்மானிப்பதில் தொடர்ந்து ஓரவஞ்சனை காட்டப்படுகிறது.
ஒதுக்கிய நிதியை தருவதில் காலதாமதம் செய்வதும், மாநில அரசின் திட்டங்களுக்கு வந்து சேர வேண்டிய பங்களிப்பை இழுத்தடிப்பு செய்வதும் ஏற்புடையதல்ல.
தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப்பகிர்வை அரசியலாக்கி, விவாதப்பொருளாக்கி தமிழ்நாட்டு மக்களைத் தண்டிக்கும் போக்கை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 9:
வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) உரிய முறையில் நிர்ணயித்து, அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயப் பெருமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தியும், இதுவரை அவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை.
எனவே, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தவாறு, சராசரி உற்பத்திச் செலவுடன், 50 சதவீத லாபத்தை அளிக்கும் வகையில் வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உடனடியாக சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று மத்திய அரசை பொதுக்குழு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 10
இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைக் கைது செய்வதையோ அவர்களது உடைமைகளைச் சேதப்படுத்துவதையோ இனியும் அனுமதிக்க முடியாது.
ஏற்கனவே சிறைபட்டிருக்கும் தமிழக மீனவர்களையும், அவர்களது உடைமைகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதற்கேற்றபடி இரு நாடுகளிடையே புதிய ஒப்பந்தங்களை மத்திய அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்கிற தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 11:
மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்வதற்கான மகத்தான உரிமையை கிராமசபைகள் அளிக்கின்றன. தமிழ்நாட்டில் கிராமசபைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் கமல்ஹாசனுக்கு பெரும் பங்கு இருக்கிறது.
கிராம சபை என்பது உள்ளூர் அரசாங்கம் போன்றது. கிராமசபையில் இயற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் உறுதி காட்டினால்தான் அதன் உண்மையான நோக்கம் நிறைவேறும். பங்கேற்பு ஜனநாயகத்தை உறுதி செய்யும் கிராம சபை, ஏரியா சபை ஆகியவற்றை மேலும் வலிமைப்படுத்த வேண்டும் என்று இந்தப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 12:
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்து, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது ஏற்கத்தக்கதல்ல.
தேசம் வளர்ச்சியடைய வேண்டுமானால் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என முந்தைய நடுவண் அரசுகள் முயற்சிகள் எடுத்தன. ஜனத்தொகையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்குத் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் முழுமையாக உடன்பட்டு செயலாற்றின.
இப்போது மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை உருவாக்குவது, தங்களது மாநிலங்களின் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.
பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்க்கும் சூழலில், ஒருமித்த கருத்தின்றி மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்க தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 13:
ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முயற்சி கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. மாண்புமிக்க ஜனநாயகத்தை மண் கொண்டு புதைக்கும் செயல். தேர்தலை ஒரே கட்டமாக நடத்த ஆற்றலற்ற மைய அரசு, ஒரே நேரத்தில் சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்தப்போவதாகச் சொல்வது கேலிக்கூத்து.
உலக நாடுகளே வியந்து பார்க்கும் வகையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி சிறப்பாக நடத்தப்பட்டு வருகையில் அந்த அருமையான நடைமுறையை சிதைக்கும் முயற்சிதான் ஒரே நாடு ஒரே தேர்தல்.
அழகான மாளிகையை சிதைத்துவிட்டு குட்டிச் சுவரைக் கட்டிப்பார்க்கும் முட்டாள்தனமான முடிவுதான் இது. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்குள்ளும் சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் மாநிலக்கட்சிகள் சிறப்பான நல்லாட்சியை கொடுக்காமல் இத்தகைய தேர்தல்களை எதிர்கொள்ள முடியாது எனும் கட்டாயம் இருக்கிறது.
தீர்மானம் 14:
தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21-ஆக குறைக்க மத்திய அரசு உரிய சட்டதிருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது” ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”சகுனிகள் வாழும் சமூகத்தில் நியாயவாதியாக இருக்க கூடாது” – ரீசன் சொன்ன ரஜினி
டிஜிட்டல் திண்ணை: நிர்மலா நடத்திய ரகசிய மீட்டிங்! லண்டனில் அண்ணாமலை ஷாக்… பாஜகவில் திடீர் மாற்றம்!