சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது வரும் ஜூன் 14ஆம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்திருந்தது.
இந்த நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்களை கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் கடந்த 2012 முதல் 2022 வரையிலான காலத்தில், சிட்டி யூனியன் வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கிகளில் பணிபுரிந்த ஊழியர்களின் விவரங்களை வழங்க வேண்டும். 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவியின் பெயர்களில் டெபாசிட் செய்தவர்களின் பான் கார்டு விவரங்களையும் தெரிவிக்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி
தரப்பில் வழக்கறிஞர் கெளதமன் ஆஜராகி, அமலாக்கத்துறையால் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் ஒரு சில ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ் தனது வாதத்தில், ”வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யும் சூழல் உள்ள நிலையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 91-ன் படி ஆவணங்களை வழங்கக் கோரி மனுக்களை தாக்கல் செய்ய முடியாது என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.
மேலும் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய மனைவி மேகலா வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை முழுவதுமாக செலவு செய்துள்ளதாகவும், தற்போது தனக்கு தெரியாது என கூறுவது ஏற்புடையதல்ல.
மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் மனுக்களைத் தாக்கல் செய்து வருகிறார்கள்” என குற்றம்சாட்டினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, செந்தில் பாலாஜி மனுக்கள் மீது ஜூன் 14ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா