ஆளுநருக்கு சுயமரியாதை இருந்தால்? – கொளத்தூர் மணி காட்டம்!

Published On:

| By Kalai

7 பேர் விடுதலை தொடர்பான ஆளுநரின் செயல்பாடு ஆணவத்தின் உச்சம் என்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி காட்டமாக பேசியிருக்கிறார்.

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை குறித்து கொளத்தூர் மணி பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அதில், “தற்போதைய தீர்ப்பு வரவேற்கக்கூடியது என்றாலும் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்திருக்கவேண்டும்.

ஏற்கனவே 6 பேரையும் விடுதலை செய்ய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும், அதற்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் காலம் தாழ்த்திக் கொண்டிருந்தார்.

அவருக்கு சனாதனத்தைப் பற்றி பேசுவதற்கும், தேசியக் கல்விக் கொள்கையைப் பற்றி பேசுவதற்கும், திருக்குறள் போப் உரையைப் பற்றி பேசுவதற்கும் தான் நேரம் இருக்கிறது. தன்னுடைய வேலையை அமர்ந்து பார்ப்பதில்லை.

எதெல்லாம் தமிழ்நாட்டு அரசின் கொள்கைகளுக்கு விரோதமாக இருக்கிறதோ, அதையெல்லாம் பொது இடங்களில் பேசிக்கொண்டிருப்பது, அதற்கு காலத்தை கடத்துவது.

ஆனால் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை உரிய நேரத்தில் செய்ய அக்கறை காட்டவில்லை என்றால் அது ஆளுநரின் ஆணவமாகத்தான் பார்க்கவேண்டும்.

ஆளுநரின் உரிமை, பதவியைப் பற்றிய நாட்டளவிலான ஒரு பெரிய விவாதம் நடத்தவேண்டும் என்று விரும்புகிறோம். சுயமரியாதை உடைய ஆளுநராக இருந்தால் தனது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளவேண்டும்.

தவறு என்று சுட்டிக்காட்டியபிறகும், பலரிடம் இருந்து எதிர்ப்புகள் வந்தபிறகும் அவர் சனாதனத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். இது ஆளுநர் பொறுப்புக்கே அவமானமாக இருக்கிறது.

ஆளுநர் ஒப்புதல் வழங்க காலவரை இல்லை என்பதை பயன்படுத்திக் கொண்டுதான் பலவற்றை தள்ளிப்போட்டு கொண்டிருக்கிறார்.

எனவே ஏதேனும் ஒரு வரையறையை உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கவேண்டும் என்பதும் எங்களது விருப்பம்” என்று காட்டமாக பேசியுள்ளார்.

கலை.ரா

“கருணை அடிப்படையில் விடுதலை இல்லை” – நளினி வழக்கறிஞர் விளக்கம்

6 பேரும் விடுதலை : தீர்ப்பில் நீதிபதிகள் சொன்னது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel