அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள பிஆர்எஸ் மூத்த தலைவரும் கேசிஆர் மகளுமான கவிதாவின் கஸ்டடி மார்ச் 26-வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 15.-ஆம் தேதி கவிதா கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கவிதாவை மார்ச் 23-ஆம் தேதி வரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அமலாக்கத்துறை கஸ்டடி இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி காவேரி பவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில் சோகேப் ஹூசை ஆஜராகி, “கவிதாவின் தொலைபேசியை பகுப்பாய்வு செய்தபோது, தரவுகளை நீக்கியுள்ளார் என்பது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் கவிதாவின் மருமகனுக்கும் தொடர்பு உள்ளது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது என்று பதிலளித்தார்.
கவிதாவின் மருமனுக்கு பல முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் ஆஜராகவில்லை. அதனால் இன்னும் 5 நாட்கள் கவிதாவிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
கவிதா தரப்பில் வழக்கறிஞர் நிதிஷ் ராணா ஆஜராகி, “கவிதாவிடம் சில ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறை கோரியிருந்தது. ஆனால், அவர் மத்திய புலனாய்வு அமைப்பின் காவலில் இருக்கும் வரை ஆவணங்களை வழங்க முடியாது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி கவிதா மனுத்தாக்கல் செய்துள்ளார்” என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட அமலாக்கத்துறை வழக்கறிஞர் சோகேப் ஹூசை, கவிதாவிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜாமீன் வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கவிதாவின் கஸ்டடியை மார்ச் 26-வரை நீட்டித்து நீதிபதி காவேரி பவேஜா உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜயபாஸ்கர் வழக்கு: குற்றப்பத்திரிக்கை நகல் கேட்டு அமலாக்கத்துறை மனு!