தூத்துக்குடியில் உள்ள அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை பாஜகவினர் இன்று (டிசம்பர் 23) முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது, “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதல்வரையும், அமைச்சர்களையும் பற்றி அவதூறு பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அண்ணாமலை மேடையில் ஏறும்போது நாங்கள் மேடையில் ஏறுவோம்.” என்று பேசியிருந்தார்.
இந்தநிலையில், தூத்துக்குடியில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி பாஜக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, அமைச்சர் கீதா ஜீவனை மிரட்டும் வகையில்,
“நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது, கால் இருக்காது, நாக்கு இருக்காது.” என்று பேசியிருந்தார்.

சசிகலா புஷ்பா பேசியதை தொடர்ந்து பி.என்.டி காலனியில் உள்ள அவரது வீட்டில் உள்ள பூந்தொட்டி, கார் கண்ணாடி மற்றும் ஜன்னல் ஆகியவை மர்ம நபர்களால் நேற்று சூறையாடப்பட்டது.
இந்தநிலையில், அமைச்சர் கீதா ஜீவனை மிரட்டும் வகையில் பேசியதால், சசிகலா புஷ்பா மீது தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் அவதூறு பரப்புதல், கொலை மிரட்டல் விடுத்தல் 504,505,506/1 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சசிகலா வீட்டில் தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலர்கள், ராமகிருஷ்ணன், இசக்கிராஜா உள்ளிட்ட 10 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி சிப் காட் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சசிகலா புஷ்பா வீட்டில் சேதம் ஏற்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி பாஜக அலுவலகத்திலிருந்து போல்பேட்டையில் உள்ள அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை முற்றுகையிட 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஊர்வலமாக சென்றனர்.

அவர்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பாஜகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் பேரணியில் ஈடுபட முயன்ற பாஜகவினரை கைது செய்து இரண்டு வேன்களில் ஏற்றி அருகில் இருந்த தனியார் மண்டபத்தில் வைத்தனர்.
பாஜகவினர் அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை முற்றுகையிட முயன்ற சம்பவத்தால், தூத்துக்குடியில் பரபரப்பு நிலவியது.
செல்வம்
கொரோனா பீதியில் வீட்டிற்குள் முடங்கிய குடும்பம்: கதவை உடைத்து மீட்ட அதிகாரிகள்!