பாஜக குறித்து தற்போதைய தலைவர்களிடம் கேளுங்கள் என்னை இதில் இழுத்துவிடாதீர்கள் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (ஏப்ரல் 24) தெரிவித்துள்ளார்.
மதுரை திருமங்கலத்தில் உள்ள அன்னை பாத்திமா கல்லூரியில் நடைபெறும், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை நடத்தும் சோதனை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த தமிழிசை , ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்றுவரும் வருமானவரித் துறை சோதனை குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை என தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையை மோதல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழக பாஜக தலைவராக நான் இருந்தபோது அனைத்து கூட்டணிக் கட்சி தலைவர்களிடமும் மரியாதையுடன் நடந்திருக்கிறேன்.
அனைவருக்கும் கருத்துக் கூற உரிமையுண்டு அதனடிப்படையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவரது கருத்தை தெரிவித்து இருக்கிறார். பாஜக குறித்து தற்போதைய தலைவர்களிடம் கேளுங்கள் என்னை இதில் இழுத்துவிடாதீர்கள் என தெரிவித்தார்.
12 மணி நேர தொழிலாளர் திருத்தச் சட்டத்தை தொழிலாளர்களிடம் விட்டுவிடுங்கள் அதனை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டவர், நான் மருத்துவராக ஓர் கருத்து இதில் கூறுகிறேன்.
4 நாட்கள் பணி 3 நாட்கள் விடுமுறை இருந்தால் தொழில் உற்பத்தி அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் வந்துள்ளன. கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்