சென்னையில் தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய ஆபத்து வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து தமிழக அரசு போர்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (டிசம்பர் 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மூன்று நாட்களாகியும் வடியவில்லை. சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை நீர் வடிவதற்காக சாத்தியக்கூறுகளே தென்படவில்லை.
மழை நீருடன், கழிவு நீரும் கலந்திருப்பதால் கிருமிகள் தோன்றி, தோற்று நோய்கள் உருவாகி பரவக்கூடிய ஆபத்து உள்ளது. ஏற்கனவே மழை – வெள்ளத்தால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், தொற்று நோயும் பரவினால் அதை மக்களால் தாங்க முடியாது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே இன்ஃபுளூயன்சா காய்ச்சலும், டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகின்றன. அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள படுக்கைகள் நோயாளிகளால் நிரம்பிக் கிடக்கின்றன. இந்த நோய்களும் மழைக்கால தொற்று நோய்களும் சேர்ந்து கொண்டால், நோய்ப்பரவலை கட்டுப்படுத்துவது கடினமாகி விடும். இந்த ஆபத்து வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதை தமிழக அரசு உணர வேண்டும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீர் தேங்கிக் கிடந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். சென்னையின் அனைத்துத் தெருக்களிலும் மருத்துவ முகாம்களை நடத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இனியாவது காலநிலை மாற்றத்தை பற்றி அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதேபோல் இயற்கை சீற்றங்கள் அதிகளவில் வரக்கூடும்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், சினிமா போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் நேரத்தைவிட அதிகளவில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாம் விவாதிக்க வேண்டும். அடுத்த தலைமுறையினர் விழிப்புணர்வடைந்தால் தான் புவி வெப்பமயமாதல்/ காலநிலை மாற்றம் போன்றவற்றை நாம் கட்டுப்படுத்த முடியும்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
“நான் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து விலக்கவில்லை”: கங்குலி
வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க முதல்வர் கடிதம்!
ஆவின் பால் கடும் தட்டுப்பாடு… பொதுமக்கள் அவதி: அமைச்சர் வேண்டுகோள்!