பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.
உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பதற்கான வழிவகை செய்யும் அரசியல் சட்டத்திருத்தம், கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது.
இந்த இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இந்த இட ஒதுக்கீடு சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமைவதோடு, சமூக நீதிக்கொள்கைக்கும் மாறானது என்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டசபை அனைத்து கட்சித் தலைவர்களுடன் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, இன்று(நவம்பர் 12) காலை 10:30 மணியளவில், தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில்,
சட்டசபை அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.
காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை, ஹசன் மெளனாலா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன், நா.பெரியசாமி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், நாகை மாலி, சின்னதுரை, விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொல்.திருமாவளவன், ரவிக்குமார்,
பாமக சார்பில் பாலு, வெங்கடேஸ்வரன், மதிமுக சார்பில் வைகோ, சதன் திருமலைக்குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சின்ராஜ்,
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, அப்துல் சமத் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அதிமுக, பாஜக, புரட்சிபாரதம் ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
கலை.ரா