உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் ஒருவர் பின் ஒருவராக தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இடிந்து விழுந்த சில்க்யாரா சுரங்கப்பாதையில் கடந்த 17 நாட்களாக 41 தொழிலாளர்கள் சிக்கி இருந்தனர்.
அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று 12 எலி துளை சுரங்க நிபுணர்கள் மூலம் இடிபாடுகளை அகற்றி கைமுறையாக தோண்டும் பணி நடைபெற்றது.
அந்த பணிகள் அனைத்தும் இன்று மதியம் 1.30 மணியளவில் நிறைவு பெற்றதை அடுத்து தொழிலாளர்களை மீட்கும் வகையில் குழாய் அமைக்கும் கடைசி கட்ட பணிகள் தொடர்ந்தன.
இரவு 8 மணிக்கு அந்த பணிகளும் நிறைவுற்ற நிலையில், தற்போது சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் ஒருவர் பின் ஒருவராக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களை ஆம்புலன்சுக்கு அழைத்து செல்ல SDRF மற்றும் NDRF படைவீரர்கள் ஸ்ட்ரெச்சர்களுடன் காத்திருந்த நிலையில், அவர்கள் நடந்தே சுரங்கப்பாதையின் வாயிலை அடைந்தனர்.
https://twitter.com/_Sak_shi__/status/1729515392585064593
அங்கிருந்த வெளியே வந்த தொழிலாளர்கள் அனைவரையும் மாலை அணிவித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் வரவேற்றனர்.
வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் 17 நாட்கள் சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் தவித்த நிலையில் தற்போது அனைவரும் பத்திரமாக வெளியே வந்துள்ளது கவலையுடன் காத்திருந்த அவர்களது உறவினர்கள் மற்றும் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் வெளியேறிய தொழிலாளர்களுக்கு அவர்களது உறவினர்கள் ஆனந்த கண்ணீருடன் இனிப்பு ஊட்டி மகிழும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/Imbharatverma/status/1729518223614496992
இதனையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையிலும், அவர்கள் அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் பணி தொடங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’அடுத்த 10 ஆண்டுகளில் யானைகளை பார்க்கவே முடியாது’: நீதிபதிகள் வேதனை!
‘உங்களுக்கு அடையாளம் தந்தவர்’ அமீருக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு!