கேதர்நாத் கோயில் யாத்திரை நாளை (ஏப்ரல் 25) தொடங்க உள்ள நிலையில் கேதர்நாத் பகுதியில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்துக்களின் நான்கு புனித தலங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தலங்களுக்குச் செல்லும் யாத்திரையானது ‘சார் தாம்’ யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஆறு மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோயில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர்காலங்களில் கோயில்கள் மூடப்பட்டு விடும். மேலும், பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.
இந்த யாத்திரைப் பயணம் ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கும். இந்த ஆண்டு நேற்று (ஏப்ரல் 23) கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில்களுக்கான யாத்திரை தொடங்கிய நிலையில்,
நாளை (ஏப்ரல் 25) கேதர்நாத் கோயில் யாத்திரையும், ஏப்ரல் 27ஆம் தேதி பத்ரிநாத் கோயில் யாத்திரையும் தொடங்குகிறது.
கேதர்நாத் கோயிலுக்குச் சாலை மார்க்கமாகச் செல்ல முடியாது. சுமார் 20 கி.மீ தொலைவுக்குப் பக்தர்கள் மலையேறிச் செல்ல வேண்டும்.
இந்த நிலையில் கேதர்நாத் பகுதியில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. யாத்திரை செல்லும் பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்கும் இடங்களில் பனி படர்ந்து காணப்படுகிறது.
இதனால் பக்தர்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே யாத்திரை செல்லும் பக்தர்களுக்காக பாதைகளைச் சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
ராஜ்
12 மணி நேர வேலை- தொழிற்சங்கக் கூட்டம்: தலைகாட்டாத திமுக தொழிற்சங்கம்!