கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்ந்துவரும் நிலையில் உக்ரைன் போரில் இதுவரை ஒரு லட்சம் ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கிர்பி, “உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ராணுவம் சார்ந்து பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் உக்ரைன் போரில் 20,000-க்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளது. 80,000 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்துள்ள ராணுவ வீரர்களில் பெரும்பாலானவர்கள் தனியார் ராணுவ கம்பெனியைச் சேர்ந்தவர்கள்.
இந்தப் பெரும் உயிரிழப்பு பஹ்மத் என்ற சிறு நகரை ரஷ்யா கைப்பற்றும்போதுதான் நடந்துள்ளது. பஹ்மத் நகரின் பெரும் பகுதியை ரஷ்யா கைப்பற்றியிருந்தாலும், இன்னமும் சில பகுதிகள் உக்ரைன் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இதுகுறித்து ரஷ்யா தரப்பில், இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.