கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் வழங்கும், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் “டிஎஸ்பி”.
கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்நேற்று மாலை(25.11.2022) நடைபெற்றது.
இவ்விழாவினில் கலந்துகொண்டு இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “ விஜய் சேதுபதி எப்பொழுதும் ஆச்சர்யத்தை தரக்கூடிய நபர். அவருடைய படவிழாவிற்கு வந்ததே எனக்கு மகிழ்ச்சி.
விஜய் சேதுபதி இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். இந்த படத்தின் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. பாடலை நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன். இமானுக்கு எனது வாழ்த்துகள்.
இந்த படமும், பாடலும் கண்டிப்பாக வெற்றியடையும் அதற்கு எனது வாழ்த்துகள். பொன்ராம் சிறந்த மனிதநேயமிக்க நபர். இவர்களால் இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்” என்றார்
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், “இந்த திரைப்பட விழாவிற்கு வந்து வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசான் அவர்களுக்கு நன்றி.
இப்படம் குடும்பத்தோடு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான கதை. விஜய் சேதுபதி மிகச்சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார்.
இப்படத்தில் உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்துள்ளார்கள். இயக்குநர் மிகச்சிறப்பாக படத்தை இயக்கியுள்ளார், உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்குமென நம்புகிறேன்” என்றார்.
இயக்குநர் பொன்ராம் பேசுகையில், “ விஜய் சேதுபதி மிகச்சிறந்த மனிதர். அவரால் தான் இந்தப்படம் சாத்தியமானது. இந்தப்படத்தின் கதை அனைவருக்கும் பிடிக்கும்படியாக குடும்பத்தோடு ரசிக்கும்படியாக இருக்கும்.
படப்பிடிப்பு மிக சந்தோஷமாக நடந்தது. படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து எனக்கு முழு சுதந்திரம் தந்த தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்களுக்கு நன்றி. படத்தில் அனைத்து கலைஞர்களும் மிகச்சிறப்பான அர்ப்பணிப்புடன் வேலை பார்த்துள்ளார்கள். படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்
நடிகர் விஜய் சேதுபதி கூறுகையில், “நான் கமர்ஷியல் படங்கள் அதிகமாக செய்வதில்லை. இயக்குநர் பொன்ராமுடன் படம் செய்வேன் என நினைக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன கதை என்னை ஈர்த்தது. என்னை முழுதாக இப்படத்தில் மாற்றிவிட்டார்.
இந்த படத்தில் நடித்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது. கமல்ஹாசன் அவர்கள் இங்கு வருவார் என எதிர்பார்க்கவில்லை. அவர் இங்கு வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி.
சினிமாவில் எதை புதுமையாக செய்ய நினைத்தாலும் அதற்கு பெரிய ஊக்கமாக நீங்கள் இருக்கிறீர்கள்.
நீங்கள் செய்த சாதனைகள் இன்னும் பல தலைமுறைகள் கடந்தும் பேசப்படும். சினிமாவில் சாதிக்க பலருக்கும் ஊக்கமாக இருக்கும்” என்றார்
நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், “ நான் இங்கு வந்தது விஜய் சேதுபதி எனும் பிரபல கலைஞனுக்காக அல்ல. என்னைப் போலவே சினிமா மீது அவர் வைத்திருக்கும் காதலுக்காக தான்.
என் தலைமுறையில் நான் பலரை வியந்து பார்த்திருக்கிறேன். அவர்கள் போல சாதிக்க ஆசைப்பட்டிருக்கிறேன். இப்போது என்னை இவர்கள் ஊக்கமாக எடுத்துக்கொள்வது எனக்கு மகிழ்ச்சி. நாளை விஜய் சேதுபதியின் சாதனையை போற்றும் நடிகர்கள் வருவார்கள், அது தான் சினிமாவின் சுழற்சி.
இந்தப்படத்தில் உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.
இராமானுஜம்