கர்நாடக மாநிலத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாகவே இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவதும், அதனால் உயிரிழப்புகள் நிகழ்வதும் அதிகரித்து வருகிறது.
ஆடல், பாடல் என கொண்டாட்டமாக இருப்பவர்கள் திடீரென மயங்கி விழுந்து உயிரிழக்கும் காட்சிகளை அடிக்கடி பார்த்து வருகிறோம்.
அதேபோன்று அதிக உடற்பயிற்சியில் ஈடுபடுவர்களும் மாரடைப்பால் காலமாகும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் கூட தனது உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு வந்த சில மணி நேரத்தில் உயிரிழந்தார்.
அந்தவகையில் கர்நாடக மாநிலத்தில் 23 வயதே ஆன இளம்பெண்ணின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹவாஞ்சே என்ற இடத்தில் நேற்று(நவம்பர் 24) திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
வரவேற்பு நிகழ்ச்சி கொண்டாட்டமாக சென்று கொண்டிருந்த வேளையில், 23 வயதான ஜோஸ்னா என்ற இளம்பெண் திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மணிப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஜோஸ்னாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஜோஸ்னா உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம், சரியான தூக்கமின்மை போன்ற காரணங்களால் உடலின் செயல்பாடுகள் மாறி இதுபோன்ற இளம் வயது மரணங்கள் நிகழ்வதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கலை.ரா